Description
புத்தகக் குறிப்பு :
ஜாதி வேட்டை, மதவெறி வேட்டை பெண்களின் மீதான பாலியல் வேட்டை எனப் பரிணாமம் பெற்ற வேட்டைத் தொகுப்புகளின் மெச்சூரிட்டி ஆர்ட் வடிவமாக திரைத்துறை இயங்கி வருகிறது. இத்துறையை பற்றிய பயிற்சித் தளம், தொழில்நுட்பத் தளம், கலையறிவுத் தளம் ஆகியவை பற்றியெல்லாம் ஆய்வு நூல்கள், அளவீடு நூல்கள் உருவாக்கப்படும் அதே வேளையில், நமது சமூகம் ஜாதி வெறியோடும் மதவெறியோடும் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. அது சினிமாவில் காலந்தோறும் தன்னுடைய இயங்கியலை எப்படி அமைத்துக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லும் ஆய்வுகளும் நூல்களும் மிகக் குறைவு.
மிகத் தந்திரமாக ஜாதிக் குறித்து பேசாமல் கழண்டுவிட முயலும் சினிமா விமர்சகர்களின் நடுவில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜாதிய தற்சார்பு முகங்களை அடித்தள மக்கள் நோக்கில் நின்று விமர்சித்து வருபவை இக்கட்டுரைகள்,
தென் தமிழகத்தின் பின்புலத்தில் இருந்து திரையில் இயங்குபவர்களின் ஜாதியக் கலையையும் கட்டமைப்பையும் குமரன்தாஸ் விமர்சிப்பது என்பது தனக்குத் தெரிந்த சமூக இயங்குதளத்தில் இருந்தும் தான் இயங்கிய தலித்/பிற்படுத்தப் பட்டோர் இயக்கத்தளத்தில் இருந்தும் பெற்ற தீர்க்கமானதொரு விமர்சன பார்வையாகும். இதுவே இக்கட்டுரை தொகுப்பின் தனித்துவமாகவும் அமைந்துள்ளது.
எல்லா அறிவியல் சாதனங்களையும் ஆரவாரித்து வரவேற்ற பெரியார் “இரண்டு திரைப்படங்களை தணிக்கை இன்றி எடுக்க அனுமதித்தால் திராவிட நாடு வாங்கிக் காட்டுகிறேன்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் பிரகடனத்தையும் மீறி தமிழ் சினிமாவை தான் வகைப்படுத்திய சமூகத்தை அழிக்கும் மூன்று பேய்கள், அய்ந்து நோய்கள் பட்டியலில் இறுதி வரை வைத்திருந்தார். ஜாதிய, மத வன்முறைகளையும் வாழ்வையும் விதந்து போற்றி வெளிவரும் பெரும்பாலான சினிமாக்களை பார்க்கும் போது பெரியாரை ஒரு அறிவியல் நிராகரிப்பாளராக எப்படி புரிந்து கொள்ள முடியாதோ அப்படியே குமரன்தாஸின் இக்கட்டுரைகளின் விமர்சன வெம்மையை நிராகரித்து விட இயலாது.
ஆசிரியர் குறிப்பு:
ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த குமரன்தாஸ், 16 வயதில் மூடநம்பிக்கைக்கு தனது தாயை பலி கொடுத்த துயரத்திலிருந்தே பகுத்தறிவு உணர்வை பெறத் தொடங்கினார். 80களில் பள்ளியாசிரியர் மூலம் மார்க்சிய லெனினியக் குழுக்களின் அறிமுகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய மக்கள் முன்னணியின் ஆதரவாளராக இருந்துள்ளார். பின்னர், இன்குலாப். இளவேனில், அ. மார்க்ஸ், கோ.கேசவன் ஆகியோரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, மா.லெ. குழுவில் இருந்து விலகி சமூக விஞ்ஞான பயிலகம் என்கிற பெயரில் நண்பர்களுடன் இணைந்து செயற்பட்டு ‘பகிர்வு’ எனும் சிற்றிதழை நடத்தியுள்ளார்.
Reviews
There are no reviews yet.